ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை (தற்போது 125 நாட்களாக நீட்டிக்கப்பட்ட சூழலில்), திமுக அரசு முறையாகச் செயல்படுத்தாமல் சீர்குலைப்பதாகக் கூறி, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான மோகன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி முன்னிலை வகித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பெண்கள், அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.




