ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முயற்சியால் இன்று முதல் நான்கு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஓட்டப்பிடாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமப்புற மாணவர்கள் ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆனால், கல்லூரிக்குச் சரியான நேரத்தில் வந்து செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து கல்லூரி பேராசிரியர்களும், மாணவ - மாணவிகளும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மாணவர்களின் கல்வி நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து மண்டல மேலாளரிடம் எம்.எல்.ஏ தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு, இதற்கான விரிவான நடவடிக்கைகளையும் எம்எல்ஏ மேற்கொண்டார்.
இதனையடுத்து மாணவர்களின் வசதிக்காக, திருநெல்வேலி — சீவலப்பேரி — மணியாச்சி — ஓட்டப்பிடாரம் கல்லூரி வழியாக தூத்துக்குடிக்கும், கோவில்பட்டி — பசுவந்தனை — ஓசனூத்து — ஓட்டப்பிடாரம் கல்லூரி வழியாக தூத்துக்குடிக்கும், தூத்துக்குடி — குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரம் கல்லூரிக்கும், தூத்துக்குடி — தட்டப்பாறை வழியாக ஓட்டப்பிடாரம் கல்லூரிக்கும் என 4 புதிய பேருந்து வழித்தடங்களின் தொடக்க விழா இன்று ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு, பச்சைக்கொடியசைத்து புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.
"மாணவர்கள் கல்வி கற்பதற்கு போக்குவரத்து ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இனி மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும்," என இந்நிகழ்வின் போது எம்.எல்.ஏ தெரிவித்தார்.
இந்த பேருந்து வசதியால் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து பொது மேலாளர் ராமகிருஷ்ணன், மண்டல மேலாளர் சண்முகம், புறநகர் கிளை மேலாளர், விஜயகுமார் தொமுச நிர்வாகிகள் மாடசாமி, சுப்பிரமணி, முருகேசன், முத்துராஜ், உலகநாதன், கலையரசன், பட்டாணி, பால்ராஜ் கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



