தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, வேலைக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞர்களின் நலன் கருதி இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வித் தகுதிக்கேற்ப மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 9-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தோல்வி பெற்றோருக்கு ரூ. 200/- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ. 300/- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ. 400/- மற்றும் பட்டதாரிகள் ரூ. 600/உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தது 5 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைத் தொடர்ந்து முறையாகப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) 45 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும்இருக்க வேண்டும். மேலும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தற்போது வழக்கமான முறையில் பள்ளி அல்லது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.இருப்பினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் படிப்பவர்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள்.
எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுப் பணிக்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்விதத் தடையும் ஏற்படாது. தகுதியுள்ள நபர்கள் தங்களின் அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.




