தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில், விளாத்திகுளம் பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரச்சார உரையை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:-
இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதியில் பேசி முடித்துவிட்டு 120 கி.மீ தொலைவில் விளாத்திகுளம் வருவதற்கு தாமதமாகிவிட்டது. எனக்காக மழையையும் பொருட்படுத்தாமல், கால் வலிக்க ரொம்ப நேரம் நின்று வருகிறீர்கள். அனைவரும் பொறுத்தருல வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் விவசாய பெருங்குடி மக்கள். அதனால் தான் ஒரு விவசாயியை காத்து நின்று வரவேற்கிறீர்கள். விவசாயிக்கு விவசாயிகள் ஆதரவாக இருக்கின்ற இந்த விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை.
வறட்சி, புயல், வெள்ளம் என விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு விளாத்திகுளம் தொகுதிக்கு மட்டும் சுமார் 400 கோடி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அண்ணா திமுக அரசு.

இங்கு இருக்கக்கூடிய ஏரி, குளம் கண்மாய்கள் அனைத்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசில் தான் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. அந்தத் தூர்வாரப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு விலை இல்லாமல் கொடுக்கப்பட்டது. அதை விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு போட்டு நல்ல விளைச்சல் வந்தது. இப்படிப்பட்ட திட்டத்தை இந்த திமுக அரசு நிறுத்திவிட்டது இந்த அரசாங்கம் உங்களுக்கு தேவையா ? இங்குள்ள விவசாயிகளும் விவசாய தொழிலாளிகளும் வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டும் என்றால் அது அண்ணா திமுக ஆட்சியில் தான் நடக்கும்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருஉருவப் படத்தை சட்டமன்றத்தில் நானே திறந்து வைத்தேன். அவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்து அரசு விழா எடுக்கிறோம். இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுச்சின்னம் விளாத்திகுளத்தில் அண்ணா திமுக அரசில் அமைக்கப்பட்டது.
எட்டயபுரத்தில் உமறுப்புலவர் அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்க இடம் ஒதுக்கி பூர்வாங்க பணிகள் அண்ணா திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது.
வறண்ட பூமியான விளாத்திகுளத்தில் நல்ல நீர் கிடைத்து விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட வசதியாக தாமிரபரணி வைப்பார் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாறிவிட்டது. திமுக அரசு தற்போது அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
அதிமுக ஆட்சியில் வைப்பாற்றின் குறுக்கே 11 கோடி மதிப்பீட்டில் உயரமட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. நாகலாபுரத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அரசு கல்லூரியாக உயர்த்தப்பட்டது. வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சுமார் 515 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. இவ்வாறு அவர் கூறினார்.




