தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் திருவிழாக்களின் போது, உபயதாரர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர்களை அச்சிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சாதிப் பிரிவினைகளைக் களைந்து சமத்துவத்தைப் பேண அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனை எதிர்த்தும், சாதிப் பெயர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் திருப்போரூரைச் சேர்ந்த சமரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய தத்துவத்தை நாம் பின்பற்றும் வேளையில், பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிப் பெயர்கள் மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது. சாதியை ஒழிக்க ஒவ்வொரு அரசு அதிகாரியும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அதை ஊக்குவிக்கும் விதமாகவோ அல்லது பெரிதுபடுத்தும் விதமாகவோ செயல்படக் கூடாது.
அரசுத் துறையான அறநிலையத்துறை நடத்தும் விழாக்களில் சாதிப் பெருமையை வெளிப்படுத்துவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் கோயில் திருவிழாக்களுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்; எக்காரணம் கொண்டும் சாதிப் பெயர்களைச் சேர்க்கக் கூடாது.
திருப்போரூர் கோயில் விழா இன்று தொடங்குவதாலும், அழைப்பிதழ்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டதாலும், இந்த ஆண்டுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கோயில் ஊர்வலங்களின் போது சிலைகளைத் தூக்கிச் செல்ல குறிப்பிட்ட பிரிவினரை எதிர்பார்க்காமல், உடல் வலிமை கொண்ட தன்னார்வ பக்தர்களைக் கொண்டு 'பாதம்தாங்கி குழு' அமைத்து மேலாண்மை செய்ய கோயில் செயல் அலுவலருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



