தங்களுடைய சொந்தப் பணத்தில் கிராமத்திற்கு `ஹைமாஸ் லைட்’ அமைத்துக் கொடுத்த காவலர் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார்.
அருண்குமார் மனைவி, காவலர் காயத்ரி, இவரும் கடலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து, தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

தங்கள் ஊர் பேருந்து நிலைய நிறுத்தம் இருட்டில் இருந்ததால், அங்கு தெருவிளக்கு அமைக்க நினைத்த அருணும் காயத்ரியும், தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து, 6 லைட்களுடன் 60 அடி உயரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் `ஹைமாஸ் லைட்’ அமைத்து நெகிழ வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.



