உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. வர்த்தகம், ராணுவம் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார். சீனா அமெரிக்காவிலிருந்து இந்த பருவத்தில் 20 மில்லியன் டன் சோயாபீன் இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த பருவத்தில் இது 25 மில்லியன் டன்களாக உயரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருகிறது.
தைவான் விவகாரம், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் ஈரான் உடனான தற்போதைய பதற்றமான சூழல் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இயந்திர விநியோக வர்த்தகம் குறித்தும் நேர்மறையான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் மாதம் அதிபர் டிரம்ப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை அவர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். "அதிபர் ஜி ஜின்பிங் உடன் எனக்குள்ள தனிப்பட்ட நட்பு மிகவும் சிறப்பானது. எனது அடுத்த 3 ஆண்டு கால ஆட்சியில் சீனாவுடன் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்," என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டிரம்ப்புடன் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் வீடியோ கால் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ரஷ்யா - சீனா இடையிலான நட்பு "உண்மையான நலன் பேணும் நட்புறவு" என புதின் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிசையான பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பிரதமர் மோடி இணங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



