இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 2026-27ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நிலவும் எல்நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென் மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், காரீப் மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 காரீப் பருவத்தில், வாழை, பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய பிரிமீயம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.4525/- (ஹெக்டேருக்கு ரூ.11176.75) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாழை பயிருக்கு 15.09.2026 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, பயிர் வளர்ச்சி கால் இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு செய்யப்படுகின்றன.
எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட வாழை பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க்காப்பீட்டு இணைய தளத்தில் (https://pmfby.gov.in/) உள்ள "விவசாயிகள் கார்னர்" வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறு வட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ, தோட்டக்கலை அலுவலரையோ, உதவி தோட்டக்கலை அலுவலரையோ, வங்கி கிளைகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட 13 பிர்க்காக்களில் வாழை பயிருக்கு காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.