தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 1190 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் ஜான் பாண்டியன் (58) என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1190 மது பாட்டில்களை காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.