திருநெல்வேலி மாவட்டம் , நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையில் சென்றவர்கள் மற்றும் டீக்கடை அருகே நின்றவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் பாய்ந்து சரமாரியாக வெட்டியது.
இந்த தாக்குதலில், வடமாநில தொழிலாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்:-
தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடிக்கும் இந்த ஆட்சியில், பொதுமக்களின் உயிருக்கு எங்கே உத்தரவாதம் இருக்கிறது? காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் இப்போதாவது விழிப்பாரா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு இந்த ஆட்சி இடம் கொடுத்துள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்காத இந்த திமுக ஆட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படுவது உறுதி என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.



