சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சயனைடு கலந்த வெடிகுண்டுகள் வெடிக்கப்போவதாக வந்த மிரட்டலால் இன்று பெரும் பதற்றம் நிலவியது.சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு இன்று ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், சயனைடு நிரப்பப்பட்ட இரண்டு RDX ரக வெடிகுண்டுகள் மதியம் 12.45 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் வெடிக்கும். எனவே, இஸ்லாமியர்கள் அங்கிருந்து முன்கூட்டியே வெளியேறிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தலைமை நீதிபதியின் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஆவணங்கள் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்யப்பட்டது.
நீண்ட நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் சிக்காததால், இது ஒரு வெற்று மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சோதனையால் இன்று காலையில் நடைபெறவிருந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.



