திருநெல்வேலி பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியில் இரு தரப்பினரிடையே நள்ளிரவு சுமாா் 11 மணியளவில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் போலீசாருக்கு எட்டிய நிலையில், 2 தரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் இருக்க போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதாவது, ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் இருந்த காவலர்களை நோக்கி அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளாராம். இதனை கண்டு அதிர்ச்சியிடைந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தவும், தங்களைப் பாதுகாத்து கொள்ளவும், சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
இதனையடுத்து, உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறதாம். ஆனால், சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.



