தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கூட்டணி சஸ்பென்ஸ் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீர் திருப்பமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் இளங்கோவன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து கூட்டணி உறுதியானது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மாறாத அன்பு கொண்ட எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக, நம் கூட்டணியில் இணைந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. கருப்பு-சிவப்பு வண்ணத்தைக் கொடியில் ஏந்தியிருக்கும் உங்களின் வருகை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கட்டும். ஆட்சி தொடரவும், தமிழகம் முன்னேறவும் ஒன்றிணைந்து வெல்வோம். மேலும், கட்சியைத் திறமையாக வழிநடத்தி வரும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு விருப்பத்தின் பேரிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். அப்போது கலைஞர் அவர்கள் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' எனக் குறிப்பிட்டார். அது 10 ஆண்டுகள் கழித்து இப்போது கனிந்திருக்கிறது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பது குறித்து இரு கட்சிகளும் குழுக்கள் அமைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் முதல்வர் அறிவிப்பார்.



