தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, பெரியளவில் அரசியல் பேசாதது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட பிரதமர் மோடி விமர்சிக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி புதிய விமான நிலைய விரிவாக்கக் கட்டடத்தைத் திறந்து வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதே போல், கங்கைகொண்ட சோழபுரம் வந்த அவர், சோழீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தியதோடு, ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவிலும் பங்கேற்றார்.
இதற்கிடையே, திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரதமர் மோடி சுமார் 9 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். ஏப்ரல் மாதம் இராமேஸ்வரம் வந்த மோடி, தற்போது ஜூலை மாதத்தில் மீண்டும் தமிழ்நாடு வந்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழக பயணம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த 2 நாள் பயணத்தில் மோடி பெரியளவில் அரசியல் பேசவில்லை. கடந்த 10 ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி கொடுத்துள்ளோம். இந்த தொகை முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விடவும் 3 மடங்கு அதிகம். அதே போல் 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம் என்று மட்டுமே பேசி இருந்தார்.
ஆடி திருவாதிரை விழாவில் கூட ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசிய மோடி, ஆளும் கட்சியான திமுக பற்றிப் பேசவில்லை. பிரதமர் மோடி அரசியல் பேசாமல் அமைதி காத்திருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இதற்குப் பிரதமர் மோடி பங்கேற்றது அரசு விழா என்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழக அரசு தரப்பிலும் கடந்த சில மாதங்களாகப் பிரதமர் மோடி மீது பெரியளவில் விமர்சனம் வைக்கப்படவில்லை என்றும் பார்க்கப்படுகிறது.
அதே போல், தமிழக அரசியலை முழுக்க முழுக்க அமித்ஷா கையில் வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமித்ஷா பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பதால், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த பயணங்கள் வேறு மாதிரி வடிவமைக்கப்படும் என்றும் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு 6 மாதங்கள் குறைவாக இருக்கும் போது, மோடியின் அரசியல் பேச்சுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



