வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார் உள்ளிட்ட பல்வேறு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் விளங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள், ஓட்டப்பிடாரம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகளவில் இருப்பதால் இந்த தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் ஆகும். இது பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதியாக விளங்கி வருகிறது.
இங்கு பெரிய அளவில் நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால் மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொகுதியில் அமைந்து உள்ள புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி அதிக அளவு நடந்து வருகிறது. இந்த தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி தொடக்கத்தில் பொது தொகுதியாக இருந்தது. அப்போது 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1967 ஆம் ஆண்டு கடம்பூர் தொகுதி நீக்கப்பட்டு பெரும்பான்மையான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டதால் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது.
இந்த தொகுதி 1962 முதல் இதுவரை 15 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இதில் 3 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, ஜனதா கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவை தலா ஒருமுறை வெற்றி பெற்று உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
1991, 2001, 2006, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக நேரடியாகவும், 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் என ஓட்டப்பிடாரம் தொகுதியானது அதிமுக வசம் பலமாக இருந்த நிலையில் தான், அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது நடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக வென்று ஓட்டப்பிடாரம் தொகுதி வரலாற்றை மாற்றி அமைத்த பெருமை ஓட்டப்பிடாரம் தற்போதைய எம்எல்ஏ சண்முகையாவையே சாரும் என்கின்றனர் உடன் பிறப்புகள்.

தொகுதி வரலாற்றையே மாற்றி அமைக்கும் அரசியல் வல்லமை பெற்ற ஆளுமை மிக்க சண்முகையா சட்டமன்ற உறுப்பினராக எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமை தான் என்று நெகிழ்கின்றனர் தொகுதி உடன் பிறப்புகள்.

ஓட்டப்பிடாரம் தொகுதியை திமுக வசம் ஆக்கியத்தோடு நிற்காமல், அதனை தக்க வைக்கும் விதமாகவும் தொடர்ந்து தொகுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அரசின் உடைய அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் அக்கட்சியினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதை கள நிலவரம் உணர்த்துகிறது.

தற்போதைய சூழலில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம் கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆதரவோடு, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் சுறுசுறுப்பு பணிகளோடு திமுக வசமே உள்ளது என்பதே கள யதார்த்தம்.



