கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட பொதுமக்கள் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
"பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளு முள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின் படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த போது பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தவே நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது.
அதிமுக கூட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதில்லை. என்னுடைய கூட்டங்களுக்கும் இதே நிலைமை தான். உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம், மனித உயிர் விலை மதிக்கத்தக்கது. அதனால் அரசியல் கட்சிகளும் மக்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து, கடந்த கால கூட்டங்களை ஆராய்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மிகுந்த வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்கிறேன். மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கூட்டம் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற அனுபவம் உள்ளது. அதை இவர்களும் கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை வான் சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். அதில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றிருக்க கூடாது. அரசு கடமையில் இருந்து தழுவியது தான் உயிரிழப்புக்கு காரணம். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறாமல் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதற்கு முன்பு நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.



