தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் தற்போது போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கோரியும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் கடந்த சில நாட்களாக மாணவியின் உடலைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குறித்து வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, 2019ஆம் ஆண்டு அவர் மீது 3 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அது போல் 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. மேலும் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த போது வேடநத்தத்தில் மாணவியை கொலை செய்தது தெரியவந்தது.
