வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து தேசிய பாஜக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, மாநில செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்டு ராஜா, சுயம்பு, சரவணன் சிவபெருமாள் பாஜக நிர்வாகிகள் கந்தசாமி, பெஞ்சமின் பாண்டியன், லீலாவதி, புகழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

