தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்காத விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11-ம் தேதி மாயமான தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அந்தப் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் ஆய்வாளர் பிரவீனா மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், பெற்றோரை அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் இந்த அலட்சியப் போக்கே மாணவியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரை முறையாக விசாரிக்காதது மற்றும் கடமை தவறியது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில், ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
