தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்த 52 வயதான ஆறுமுகம் என்பவர் லாரி ஷெட் உரிமையாளராக இருந்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி இரவு, 4-வது கேட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிக்க அவர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்து தனது மற்றொரு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற ஆறுமுகம், மீண்டும் திரும்பவில்லை.
இருவரும் ஆதிபராசக்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த உறவினர், அருகில் இருந்த மதுபாட்டிலால் ஆறுமுகத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தின் சித்தி மகன் ஆனந்த் (38) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மது அருந்தும்போது தனது குடும்பத்தைப் பற்றி ஆறுமுகம் அவதூறாகப் பேசியதால், ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் அவரைத் தாக்கிக் கொலை செய்ததாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
