தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பேயன்விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் சுனாமி நகர், ஆலந்தலையைச் சேர்ந்த மணிகண்டன் (21) என தெரியவந்தது. அவர் அப்பகுதி இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களைச் சிறு பொட்டலங்களாக விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் 10 'ஜிப் லாக்' கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
