விளாத்திகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ராமச்சந்திராபுரம் கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். பல தலைமுறையாக விவசாயம் செய்கிறோம். நான் பி.ஏ., பி.எல்., முடித்துவிட்டு வழக்கறிஞர் தொழில், அரசியல் என்று பரபரப்பாக இயங்க ஆரம்பித்தேன்.
ஆனாலும் விவசாயத்திற்கும் எனக்குமான உறவு நீடித்து வருகிறது. ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக தரிசாக, சீமை கருவேல மரங்கள் மண்டி கிடந்தது. அந்த நிலத்தை சீர்படுத்தி வேலியோரங்களில் சவுக்கு மரங்களும், பழ மரங்களும் நட்டேன். அந்தப் பழ மரங்களில் இருந்து ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
மேலும், எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. மாட்டுப் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்யலாம் என்று என் மகன் கூறவே, அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டில் இந்த பண்ணையை ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் பண்ணையில் 4 மாடுகள் தான் இருந்தது. இப்போது 70 கலப்பின பசுமாடுகளும், 20 கன்று குட்டிகளும் 10 நாட்டு பசு மாடுகளும் இருக்கின்றன. மாட்டுச்சாணம், சிறுநீரை சேகரித்து பயோ காஸ் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்கிறேன். இதில் தினமும் 15 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது. இதை என் பண்ணை வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன்.
மொத்தமுள்ள 25 ஏக்கரில் 5 ஏக்கரில் மாடு, ஆடு கொட்டகை அமைத்து பசுந்தீவனம் பயிர் செய்கிறேன். 10 ஏக்கரில் குண்டு மிளகாய், மேலும் பல விதமான காய்கறிகள், கீரைகள் மூலிகைகளை பயிர் வருகிறேன்.

மழைநீர் சேமிப்புக்காக 100 அடி நீளமும், 25 அடி அகலமும் 10 அடி ஆழமும் கொண்ட பண்ணை குட்டை அமைத்து உள்ளேன். அதில் விறால் மீன் வளர்கிறேன். ஒரு ஓலை கொட்டகை அமைத்து வாத்துக்கள் வளர்க்கிறேன். மாட்டுப் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல் நெய்யாகவும் பன்னீராகவும் மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன்.

நஷ்டம் ஏற்படாத அளவுக்கு பண்ணையை நிர்வாகம் செய்யும் வகையில் வருமானம் கிடைக்கிறது. இயற்கை விவசாயம் வாயிலாக ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பொருட்களை சாகுபடி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மற்ற விவசாயிகளுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம் என்கிறார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவான மார்கண்டேயன்.
