மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற லாரி ஓட்டுநர் ஆம்னி பேருந்து மோதி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (48). இவர் கோயம்புத்தூரிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்க ஜெகன் முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்து ஓட்டுநர் தினகர் ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
