• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி கொலை வழக்கு : மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2018-ஆம் ஆண்டு, தூத்துக்குடி கே.வி.கே சாமி நகரைச் சேர்ந்த ஹரிகுமார் (25) என்பவருக்கும், அவரது மனைவி வீட்டாருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாப்பிள்ளையூரணி பகுதியில் வைத்து ஹரிகுமாரை அவரது மாமனார் சுப்பிரமணி (58) மற்றும் உறவினர் சத்தியநாராயணன் (34) ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.


இது தொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முறையான விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த  தாண்டவம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார்.


குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரி சுப்பிரமணிக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மற்றொரு நபர் சத்தியநாராயணன் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


இந்த வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், தாளமுத்துநகர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமை காவலர் சங்கரி  ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதன்  பாராட்டினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

விளாத்திகுளம் விவசாயிகள் ஷாக்... மாவட்ட ஆட்சியரிடம் பகீர் புகார்!

  • Share on