விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பித்தார்.
மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல்
விளாத்திகுளம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, உயர்கல்வியில் நவீன தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், உதவி ஆணையர் மெய்வேல் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரத்தில் புதிய வளர்ச்சிப் பணிகள்

எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடுத்தடுத்து மூன்று முக்கியப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
சுகாதார வளாகம்:
எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் ரூ.13.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்:

எட்டயபுரம் 11 மற்றும் 13-வது வார்டு பொதுமக்களின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் விதமாக, பவுண்ட் தெருவில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி இயந்திரம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
பேவர் பிளாக் சாலைகள்:
எட்டயபுரம் 8 மற்றும் 15-வது வார்டுகளில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கல்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன்,திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜன், இம்மானுவேல், நவநீத கண்ணன், பேரூர் கழகச் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதிகணேசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



