இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பூபாண்டி (22). முருகேசன் என்பவரது மகனான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பூபாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாகப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
வழியில் அந்தப் பெண்ணை மறித்து தேவையற்ற தொல்லைகள் கொடுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் எல்லை மீறிய பூபாண்டி, அந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
தொடர் தொல்லைகளால் மனமுடைந்த அந்த இளம்பெண், இது குறித்து கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, பூபாண்டியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.




