தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு தருவைகுளம் போலீசார் நடத்திய சோதனையில் பெரிய அளவிலான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சமத்துவபுரம் செக்போஸ்ட்டில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேகமாக வந்த ஒரு ஈச்சர் (407) சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றார்.
நிற்காமல் சென்ற வாகனத்தை, அங்கு பணியில் இருந்த தலைமை காவலர்கள் குருசாமி மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் தங்களது பைக்கில் துரத்தத் தொடங்கினர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டிய நிலையில், வேப்பலோடை அருகே போலீசார் நெருங்குவதை உணர்ந்த டிரைவர், வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு இருட்டில் புதர்களுக்குள் தப்பி ஓடினார்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது உறுதியானது. 38 மூட்டைகளில் 2,000 கிலோ பீடி இலைகள் மற்றும் 8 மூட்டைகளில் 240 கிலோ சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்த மொத்த பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் வாகனம் தருவைகுளம் போலீசார் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபரைக் கண்டறியவும், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.




