'பரியேறும் பெருமாள்' முதல் சமீபத்திய 'வாழை' மற்றும் 'பைசன்' வரை தத்ரூபமான படைப்புகளால் முத்திரை பதித்த இயக்கநர் மாரி செல்வராஜ், தான் பயின்ற தூத்துக்குடி பள்ளிக்கு திடீர் விசிட் அடித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மாரி செல்வராஜ் தான் பள்ளிப் படிப்பை முடித்த தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளிக்கு தனது காரில் வருகை தந்தார். அவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி அன்புடன் வரவேற்றார்.

நேராகத் தான் பாடம் கவனித்த வகுப்பறைக்குச் சென்ற இயக்குநர், பழைய பெஞ்சில் அமர்ந்து தனது மாணவர் பருவத்தை அசைபோட்டார். கரும்பலகையில் நீங்கா நினைவுகளுடன் என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதித் தனது கையெழுத்தைப் பதித்தார். தனக்கு கணிதப் பாடம் கற்பித்த மறைந்த ஆசிரியர் தெய்வ முருகன் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
முன்னாள் தலைமையாசிரியர்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தான் பயின்ற காலத்தில் பொறுப்பில் இருந்த ராஜகோபால் கொரோனா காலத்தில் மறைந்துவிட்டதை அறிந்த மாரி செல்வராஜ், மிகுந்த மனவருத்தத்துடன் கண்கலங்கினார்.
அன்று ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன, என நெகிழ்ந்தார். விடுதியில் தங்கிப் படித்தபோது, இரவில் சுவர் ஏறி குதித்து சினிமாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது ஆசிரியர்களிடம் சிக்கிக் கொண்ட சுவாரசியமான அனுபவங்களைக் கூறினார். தனது நெருங்கிய நண்பர்களான ரமேஷ் மற்றும் சந்தனம் ஆகியோரை நினைவு கூர்ந்த அவர், தற்போது தொடர்பில் இல்லாவிட்டாலும் அந்த நட்பு என்றும் மாறாதது என்றார்.
"எனது வேர்களைத் தேடி வந்த இந்தப் பயணம் மனதிற்குப் பெரும் நிறைவைத் தருகிறது" என்று கூறி நெகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடைபெற்றார் மாரி செல்வராஜ்.



