தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஹைதராபாத் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
இந்த ரயில் ( 17615/17616 ) திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. திங்கள் இரவு ஹைதராபாத்தில் ( காச்சிகுடா ) இருந்து புறப்பட்டு புதன் காலை தூத்துக்குடி வந்தடையும். புதன் காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வியாழன் மதியம் ஹைதராபாத் ( காச்சிகுடா ) சென்றடையும். சிறப்பு ரயிலாக இருந்த போது குறுகிய கால முன்பதிவே இருந்தது. இனி நிரந்தர ரயிலாக மாற்றப்படுவதால், பயணிகள் 60 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஹைதராபாத்தில் இருந்து திருவண்ணாமலை, தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். தூத்துக்குடி துறைமுக நகரமாக இருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுடனான வணிகத் தொடர்பு மேம்படும்.
தற்போதுள்ள சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் தூத்துக்குடியில் இருந்து நிரந்தர ரயில் சேவையாக இது தனது பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




