தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவருக்கும் இவரது மனைவி சாந்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு சாந்தியை பாலமுருகன் கொடூரமாகக் கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தையாபுரம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும் ஆய்வு செய்த மதிப்பிற்குரிய நீதிபதி முருகன் இன்று (27.02.2026) தனது தீர்ப்பை வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட பாலமுருகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்காகச் சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் தற்போதைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.



