தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனியாபரநல்லூரில், தமிழ்நாடு அரசின் பால் வளத்துறையின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன பால் பண்ணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ், சுமார் 46.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய நவீன பால் பண்ணை கட்டப்பட்டுள்ளது. இது 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் கொள்ளளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் இப்பண்ணையை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அனியாபரநல்லூர் பால் பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திறப்பு விழாவில், ஆவின் பொது மேலாளர் வசந்தி, பால்வளத்துறை துணை பதிவாளர் மூர்த்தி, வட்டாட்சியர் தாஹீர் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், தாசன், வருவாய் ஆய்வாளர் பேச்சியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து, தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மகளிரணி வேலம்மாள், கிளைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நவீன பால் பண்ணை செயல்பாட்டிற்கு வந்ததன் மூலம், அப்பகுதி பால் உற்பத்தியாளர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




