தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற பெரும் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளைக் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீசார் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் கடல் காவல் எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியில், இன்று (25.02.2026) அதிகாலை 2.45 மணியளவில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் கடலோரப் பாதுகாப்புப் குழுமத்தினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சோதனையின் போது, கடற்கரையில் படகு மூலம் கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.77 மூட்டைகள் இருந்தன அதில் ஒவ்வொரு மூட்டையும் சுமார் 35 கிலோ எடை கொண்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. போலீசார் வருவதைக் கண்ட கடத்தல் கும்பல், அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகள் அனைத்தும் தருவைகுளம் கடல் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும், தருவைகுளம் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோடிய கும்பலைத் தேடும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் கடல் காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




