தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள உணவகத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, பெண் ஆசிரியரை அவதூறாகப் பேசிய நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ராஜபுதுக்குடியைச் சேர்ந்த கிருபைராஜ் என்பவர் நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கமாரி (58), அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கிருபைராஜ் வெளியில் சென்றிருந்த நிலையில், தங்கமாரி மட்டும் உணவகத்தில் இருந்துள்ளார்.
அப்போது, அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் பால்தங்கச்சாமி என்பவரின் மகன் ராஜா (40), மதுபோதையில் கிருபைராஜின் கடைக்கு முன் வந்துள்ளார். திடீரென அவர் தங்கமாரியை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியதுடன், கடையின் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் உணவகத்தின் முன்பக்கக் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தன. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த தங்கமாரி, பயந்துபோய் உணவகத்திற்குள் ஓடித் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த ராஜாவைக் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.



