தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதனையெடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய வார்டு அலுவலகக் கட்டுமானப் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது. பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை ஆய்வு செய்யப்பட்டது. மைதானத்தின் தரம், தடகளப் பாதைகள் மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திமுக வட்டசெயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான தெய்வேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



