முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
திருவிழா தொடக்கத்திற்கு முன்னதாக, பிப்ரவரி 20 (வெள்ளி) அன்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ஏற்றி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 21 (சனி) அன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். பிப்ரவரி 25 (5ம் திருவிழா) இரவு நேரத்தில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறும்.
பிப்ரவரி 27 (7-ம் திருவிழா) அன்று சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், மாலையில் சிவ அம்சத்தைக் குறிக்கும் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலாவும் நடைபெறும்.
பிப்ரவரி 28 (8-ம் திருவிழா) அன்று காலையில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்திலும், மதிய வேளையில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மார்ச் 2 (சிகர நிகழ்ச்சி) விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும்.மார்ச் 3-ம் தேதி தெப்ப உற்சவமும், அடுத்த நாள் மார்ச் 4-ம் தேதியுடன் மாசித் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த ஆண்டு விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.




