தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ஜெய சுப்பிரமணியன் மகன் சரவணன் (36). இவர் தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சரவணன் பணிக்குச் சென்றுள்ளார்.
நேற்று காலை பணி நேரம் முடிந்தவுடன் சக ஊழியர்கள் அவரைத் தேடியுள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு கட்டடத்தின் அருகே சரவணன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது இறப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




