தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கும் புதிய விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, இன்று மாநிலம் தழுவிய அளவில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.



