தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் எலக்ட்ரீசன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிருழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (22). எலக்ட்ரீசனாக பார்த்து வந்த இவர், நேற்று இரவு ஸ்பிக் நகரில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்செந்தூர் சாலையில் அவர் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு பைக் அஜித்குமாரின் வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த மோதலில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித்குமார், துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த தனபால் (45) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இளம் வயதிலேயே எலக்ட்ரீசன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



