மதுபோதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், இனி சாதாரண வழக்கு அல்ல, கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
எட்டையபுரம் அருகே நேற்று ( 7.2.2026 ) நடந்த விபத்தில், மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் படுகாயப்படுத்திய கோயம்புத்தூரைச் சேர்ந்த மதன்குமார் (28) என்பவரைப் எட்டையபுரம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.



