தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் செங்கலால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அடுத்த ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (28). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றினர். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. முதற்கட்ட ஆய்வில், மர்ம நபர்கள் கார்த்திக்கை செங்கலால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆவல்நத்தம் கிராமத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



