தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முழு மானியத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஆகிய மானாவாரி வட்டாரங்களில் 1000 பண்ணை குட்டைகள் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் விவசாய நிலங்களில் முழு மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 100 பண்ணைக்குட்டைகள் அமைத்து முடிக்கப்பட்டு, பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீணாகும் மழை நீர் விவசாய நிலங்களிலேயே பண்ணை குட்டைகளில் சேகரிக்கப்பட்டு வறண்ட காலங்களில் பாசன நீராக பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு விவசாயிகள் பண்ணை குட்டைகளில் மீன் வளர்த்து கூடுதல் லாபமும் பெறலாம். பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்த விவசாயிகளின் நிலங்களில் உடனடியாக அரசு துறை அலுவலர்கள் மூலம் நீர் வழிந்து ஓடக்கூடிய தாழ்வான பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பண்ணை குட்டை அமைக்க வழிவகை செய்து தரப்படும்.
பண்ணை குட்டை அமைக்க சிறு குறு விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேவைப்படும் சிறிய பெரிய அளவிலான அளவிலான பண்ணை குட்டைகள் மண்ணின் தன்மைக்கேற்ப தேவைக்கேற்ப அமைத்து தரப்படும். விவசாயிகளுக்கு எவ்வித சிரமங்களும் இன்றி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவே விவசாய நிலங்களில் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்படும். விவசாயிகள் பண்ணை குட்டைகளில் சேகரமான மழைநீரை பயிருக்கு தண்ணீர் சிக்கனத்துடன் பயன்படுத்த தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தெளிப்பு நீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கு ஆயில் மோட்டார் அல்லது எலெக்ட்ரிக் மின்மோட்டார் 50 சதவீத மானியத்திலும் (அதிகபட்ச மானியம் ரூபாய் 15,000 )தண்ணீர் கடத்தும் குழாய்கள் பைப்புகள் 50% மானியத்திலும் (அதிகபட்ச மானியம் ஹெட்டருக்கு ரூபாய் 10,000) துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
பண்ணை குட்டை அமைத்த விவசாயிகள் சேமிக்கப்பட்ட மழைநீரை பயிருக்கு முறையாக பயன்படுத்த இந்த நுண்ணீர் பாசன திட்டங்களின் மூலம் தேவைக்கேற்ப விண்ணப்பித்து பயன் பெறலாம். மீன் வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகள் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் அரசு நிர்ணயித்த விலைக்கு மீன் குஞ்சுகளை பெற்று பயனடைய வழிவகை செய்து தரப்படும். விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வேளாண்மை துறை அல்லது தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகியோ அல்லது 98427 92877 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.



