தூத்துக்குடி அருகே அணியாபரநல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தை சோலார் நிறுவனம் ஒன்று முள்வேலி போட்டு அடைத்ததால், சோலார் நிறுவனத்தை கண்டித்து கருங்குளம் பாஜக வடக்கு ஒன்றிய விவசாய அணி சார்பாக சுற்று வட்டார பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அணியாபரநல்லூர் கிராமத்தில் பண்டாரம் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.அவரது விவசாய நிலத்தை சுற்றிலும் ரென்ஃப்ரா எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற சோலார் நிறுவனம் விவசாயி பண்டாரத்தின் நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முள்வேலிகளால் சுற்றிலும் அடைத்து விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி விவசாயி பண்டாரம் 18.11.2025 அன்று ஸ்ரீருவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மனு எண்724/2025 இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் 29.12.2025 மற்றும்19.01.2026 ஆகிய தேதியிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

அதன் பின்பு 21.01.2026 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்துள்ளார். ஆனால், அனைத்து மனுக்களுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், விவசாயி பண்டாரத்திற்கு ஆதரவாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட, கருங்குளம் வடக்கு ஒன்றியம் பாஜக விவசாய அணி சார்பாக சுற்று வட்டார பொதுமக்களை திரட்டி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.



