அமமுக துணை பொதுச்செயலாளரும், தென் மண்டல அமைப்பாளருமான கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று திமுகவில் மாணிக்கராஜா இணைய இருப்பதாக வந்த தகவலை அடுத்து டிடிவி தினகரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.



