சமூகத்துக்கும் தேசத்துக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவ இளைஞரான லிமின்டனுக்கு விருது வழங்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி இரவு, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குப் பாரதிராஜாவின் 'முடியாத பேரலை' போல உச்சக்கட்ட பயங்கரமாக மாறிய அந்த துயர இரவை மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடும் மழை வெள்ளம் மாவட்டம் முழுவதும் கொந்தளித்தது. ஆழ்வார்திருநகரி, மணல்குண்டு, பரணி, செம்பர், செல்வராஜ் நகர் என எதையும் விட்டுவைக்காமல் வீடுகளை முற்றுகையிட்ட வெள்ளத்தால் குடும்பங்களை தங்கள் உயிரோடு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. 12 முதல் 15 அடி ஆழத்திற்கு மேல் பாய்ந்தோடிய அந்த பேய் வெள்ளத்தில் மக்கள் பல தூரம் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
அந்த சூழலில், எதையும் பொருட்படுத்தாமல் குதித்தார் மணல்குண்டைச் சேர்ந்த ஒரு இளைஞன். அவர் பெயர் லிமின்டன். பிபிஏ பட்டதாரியான அவரின், எதிர்பாராத உள்ளத்தில் எழுந்த மனித நேய உணர்வே பலரது மனதிலும் அவரை இடம் பிடிக்க வைத்தது.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த வெள்ள ஓடையில் தன்னை மறந்து குதித்த அவர், மாவட்ட ஆட்சியர் கணக்குப்படி மொத்தம் நாற்பத்தெட்டு பேரின் உயிரை மீட்டெடுத்து கரைக்குக் கொண்டு வந்தார். அதில் 12 சிறுவர்கள், 30 பெண்கள், வயது முதிர்ந்து தப்பிக்க முடியாமல் தவித்த 6 ஆண்கள், வயிற்றில் இன்னோரு உயிரை சுமந்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் கூட உண்டு. அந்தப் பெண் இன்று நலமுடன் ஒரு பெண் குழந்தையை வளர்த்து வருகிறார்.
மக்கள் கண்முன்னே நிகழ்ந்த இந்த உயிர்காக்கும் வீரச் செயலை ஊர், உறவுகள் மட்டுமன்றி அரசியல்வாதிகள் முதல் ஆட்சியர் வரை அனைவரும் பாராட்டினர். மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் என பல்வேறு முனைகளிலிருந்தும் “லிமின்டனுக்கு அவசியம் வீர தீர செயல் அண்ணா விருது கிடைக்க வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து மாநில அரசுக்கே பரிந்துரை செய்தார்.
ஆனால் மக்கள் எதிர்பார்த்த வண்ணம் நிகழவில்லை. ஆதாரங்கள், சாட்சிகள் அனைத்தும் அரசின் கையில் இருந்தும், 2025 ஆம் ஆண்டிற்கான வீர தீர செயல் அண்ணா விருதுப் பட்டியலில் லிமின்டனின் பெயர் இல்லை. இது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கே பெரும் அதிர்ச்சியைத் தந்தது. "நாற்பத்தெட்டு பேரின் உயிரைப் காப்பாற்றிய ஒருவருக்கு விருது ஏன் மறுக்கப்பட்டது?" என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உயர்ந்தது. இருப்பினும், தூத்துக்குடி மாவட்ட மக்களின் இதயத்தில், லிமின்டன் என்ற பெயர், அண்ணா விருதை விடப் பெரிய விருதாகவே ஏற்கெனவே பதிந்து விட்டது.
இந்த நிலையில் தான், நேற்று ( நவ.,24 ) சென்னை ஆளுநர் மாளிகையில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உலக மீனவர் தின கொண்டாட்டத்தில், சமூகத்துக்கும் தேசத்துக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 15 -க்கும் மேற்பட்ட மீனவ சமூக உறுப்பினர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.

அதில், திருக்களூர் ஊராட்சி மணல்குண்டு கிராமத்தை சேர்ந்த சிலுவை அந்தோணி சேவியர் மகன் லிமின்டன்னை சமூகத்துக்கும் தேசத்துக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக விருது வழங்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார். இந்த கௌரவம் லிமின்டன் என்ற தனிமனித மீனவ இளைஞருக்கு மட்டும் அல்ல ஓட்டுமொத்த மீனவ சமூக மக்களுக்கும் கிடைத்த கௌரவம் என்கின்றனர் அம்மக்கள்.




