தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 3 வார்டு மாமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ரெங்கசாமி உள்ளார். இவரது வார்டுக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில், கழிவு நீரும் கலந்து வருவதாக இதனால் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி - எட்டயபுரம் ரோட்டில் அப்பகுதி மக்கள் நேற்று ( நவ.,24 ) இரவு நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சிப்காட் காவல் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ராட்சத மோட்டார் மூலம் மழை நீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணிநேரமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மதுரை கோவில்பட்டி, ராமேஸ்வரம், சென்னை செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



