தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை 17.11.2025 பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 17.11.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை (ORANGE ALERT) இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
1. மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மின் கம்பம், மின் மாற்றிகள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. மழை/வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
4. வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
5. பொதுமக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
6. பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
7. மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்
8. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது.
கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077
0461-2340101
9486454714
9384056221
பொதுமக்கள் மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.




