தூத்துக்குடியின் பாறைகள் நிறைந்த கடல் பரப்பு காரணமாக இங்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
கொச்சின் ஷிப் யார்டு மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்கள் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க தமிழக அரசுடன் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இரு நிறுவனங்களும் இணைந்து 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் வாயிலாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தூத்துக்குடியை தேர்வு செய்வதற்கு முன் நாட்டின் அனைத்து கடலோர மாநிலங்களில் உள்ள பகுதிகளையும் இரு நிறுவனங்களும் ஆய்வு செய்துள்ளன
தூத்துக்குடியின் பாறைகள் நிறைந்த கடல் பரப்பே, இந்த இடத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம் என மசகான் டாக் நிறுவனத்தின் கப்பல் கட்டுமான பிரிவு இயக்குனர் பிஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடலடி பாறைகளாக இருப்பதால் மண் மற்றும் சேறு படிவது குறைவாக இருக்கும். இதனால் துறைமுகத்தில் கப்பல்கள் தங்குவதற்கும் செல்வதற்கும் தேவையான ஆழத்தை பராமரிக்க, தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.




