புனித வெள்ளியன்று தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் அருள்தந்தை சொ.ஜோ அருண் சே.ச. தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
அப்போது, இயேசு கிறிஸ்து உயிர் நீத்த நாளை நினைவுகூரும் புனித வெள்ளியன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச் செம்மல் நெய்தல் யூ. அண்டோ ஆணையத் தலைவர் அருள்தந்தை சொ.ஜோ அருண் சே.ச.விடம் மனு அளித்தார். இச்சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளும், விடுதலைப் போரில் ஈடுபட்டு புரட்சிப் படைக்கு உதவிய தேர்மாறனின் பிறந்த நாளான டிசம்பர் - 3 ஆம் தேதி அரசு விழாவாக அறிவிக்க நெய்தல் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் இயக்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் நேரில் எடுத்துக்கூறி அதற்கும் ஆணையத் தலைவர் உதவுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.




