தூத்துக்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், நாங்களும் உங்களுடன் தான் என்று, பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கியதோடு, அவர்களோடு அமர்ந்து, அமைச்சர் கீதா ஜீவனும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாகவும் மதிய உணவு அருந்தினர்.
தூத்துக்குடி கீதாநகரில் உள்ள கீதாமெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் பகுதியில் உள்ள 55,56, 57 ஆகிய வார்டுகளுக்கான மக்கள் மனுக்களை அளித்தனர். முகாமை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொது விநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் வழங்கினர்.

மேலும், முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாங்களும் உங்களோடு தான் என்பது போல, பொதுமக்களோடு அமர்ந்து, அமைச்சர் கீதா ஜீவனும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாகவும் மதிய உணவு அருந்தினர்.



