மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் வரும் 31, 1 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி சண்முகநாதன், ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசுகையில்," ஆட்சி மாற்றம் நிச்சயம். திமுக வீட்டிற்கு போவது உறுதி. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த போது பல்வேறு திட்டங்களை மாவட்டம் தோறும் செயல்படுத்தி உள்ளார். 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்த காரணத்தினால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஒரு விவசாயி முதல்வராக இருந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும் மக்கள் எழுச்சியாக வந்து நீங்கள் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் அப்போது தான் தமிழகத்திற்கு விடிவு காலம் என்று கூறி வருகின்றனர். 2010ல் கோவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே போல தான் எடப்பாடி பழனிச்சாமியும் கோவையில் எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது.
எல்லா பொதுமக்களும் திரண்டு குடும்பத்திருடன் சென்றால் கூட மக்கள் கையை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி பார்த்து நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லி சொல்லும் அளவிற்கு தமிழகம் முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராவது உறுதி. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் உறுதி. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். எந்த திட்டங்களையும் செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போய் உள்ளது.
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை. 2026ல் அதிமுக ஆட்சி அமையும் இதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார் . இன்னும் அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வரும். 2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெல்லுவோம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம்" என்றார்.




